Sunday, November 28, 2010

பொம்மை வீடுகள்

பெருநிலத்தின் கதைகள் : 08 - நவராஜ் பார்த்தீபன்

முறிகண்டிக்குப் போகும் வழியில் வள்ளியம்மா வீட்டுக்குப் போக வேணும் என்று முதல்நாளே நினைத்திருந்தேன். வள்ளியம்மா வெளியில் உள்ள மண் அடுப்பில் முறுக்குச் சுட்டுக் கொண்டிருந்தார். அடுப்புக்கும் ஒரு முறுக்கை வைத்திருந்தார். வள்ளியம்மாவின் கூடாரதத்திற்குள் ஒரு தராசும் கொஞ்ச பயிற்றங்காய்களும் வெங்காயமும் பிஸ்கட் பைகளும் இன்னும் சில பொருட்களும் இருந்தன. என்னைப் பார்த்ததும் வாங்க தம்பி… இருங்க தம்பி… என்று அன்போடு அழைத்தார். முகத்தில் இன்னும் பெருந்துயரின் களைப்பு ஆறாமலிருந்தது. வாடி காய்ந்து போயிருந்தார். ஐயா மல்லாவிக்கு போயிருக்காறு… இப்ப வந்திருவார்.. மல்லாவியில இருக்கிற புள்ளய பாக்கப் போனாரு… என்றபடி வள்ளியம்மா தொடர்ந்து முறுக்கை சுட்டுக் கொண்டிருந்தார்.

பொன்னகரில் ஒரு காணியில் உள்ள வள்ளியம்மாவின் வீடும் அங்கிருக்கிற எல்லா வீடுகளும் டெனிசாவின் பொம்மை வீடும் ஒரே மாதிரித் தெரிந்தன. டெனிஷா விளையாடிக் கொண்டிருந்தாள். டெனிஷாவின் அம்மா ஒரு வீடு கட்டுவதை பார்த்து விட்டு தனது பொம்மைக்காக தரப்பால் துண்டுகளை வைத்து அவள் ஒரு வீடு கட்டிக் வைத்திருக்கிறாள். இந்த வீட்டை யாருக்கு கட்டியிருக்கிறீங்கள் டெனிஷா? என்று கேட்டேன். இதை என்ட பொம்மைக்காக கட்டினனான்… அதுவும் கிட்டடியிலதான் மீளக் குடியேறினது... இப்போதைக்கு அதுக்கு ஒரு வீடு தேவை அதுதான் கட்டுறன் என்றாள்.

டேனிஷாவின் வீட்டிற்கும் அவளது அம்மா குடியிருக்கும் வீட்டிற்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் தெரியவில்லை. இரண்டுமே தரப்பால்களினால் அமைக்கப்பட்டிருக்கின்றன. சுற்றி வர சுவரோ, எந்தத் தடுப்புமோ இல்லை. வெம்மையும் காற்றும் புழுதியும் தாராளமாக உள் நுழையும் அந்த சிறிய கூடாரங்களை டெனிஷா சொல்லுவதுபோல பொம்மைகள் வாழும் வீடுகள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் சில இடங்களில் பொம்மைகளின் வீடுகள் மிகவும் வசதியாகவும் அழகாகவும் இருக்கும். இங்கு பொம்மைகள்கூட வாழ முடியாத வீடுகள் எனப்படும் கூடாரங்களில் தானே வள்ளியம்மாவைப் போலிருக்கிற, தங்கப்பிள்ளை அம்மாவைப் போலிருக்கிற நமது சனங்கள் வாழ்கிறார்கள். காற்றுக்கு கூடாரங்கள் அசைந்து நடனமாடிக் கொண்டிருந்தன.

வள்ளியம்மா கிளிநொச்சி பொன்னகர் என்ற கிராமத்தில் 1983இல் இனக்கலவரம் காரணமாக வந்து குடியேறியிருக்கிறார். எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் மாயா அக்கா, பொன்;னக்கா, ஆராயி அக்கா இப்படி பலர் இனக்கலவரத்தால் இடம்பெயர்ந்து வந்திருந்தார்கள். இராமநாதன் குடியிருப்பில் இருக்கிற சந்தனதோமஸ் 1935இலேயே வன்முறைக்கு அஞ்சிக்கு கிளிநொச்கிக்கு வந்து விட்டார். வன்முறை பற்றிய கதைகளுடன் மலையகம் பற்றிய கதைகளையும் அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இனி அந்தப் பக்கமும் போக மாட்டம்… எப்பிடி நம்பி அங்க இருக்கிறது.. அந்த கொடுமையை நாம மறக்க மாட்டம்… என்று அவர்கள் சொல்லுவார்கள். செழிப்பான மலை நாட்டைப்போல அதன் குளிர்ச்சியைப்போல அவர்கள் சொல்லும் மலையகக் கதைகள் இருக்கும். இரத்தம் கசியும் வன்முறை நாட்களையுமாய் நிமிடங்களையுமாய் அவர்களது கதைகள் மாறியிருந்தன.

வள்ளியம்மாவின் கூடாரம் ஒரு தரப்பாலினால் நிலத்தில் இழுத்து கட்டப்பட்டிருக்கிறது. ஐயோ… நேற்றிரவு முழுக்க சரியான மழை.. இதுக்குள்ளதான் கிடந்தேன். சரி தறப்பாளு காத்தில போகப்போகுதுன்னு நினைச்சன் தம்பி. தண்ணி முழுக்க இதுக்குள்ள வந்திட்டுது. யாருக்கு தெரியும் மழை வருமின்னு. தெரிஞ்சா மண்ணை சுத்திபோட்டு அணைச்சிருக்கலாம்… என்று தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். இப்பொழுது மண்ணை வெட்டி கூடாரத்தை சுற்றி அணைத்துப் போட்டிருக்கிறது. பக்கத்தில் உள்ள காட்டில் வெட்டிய சில தடிகளை நட்டும் நிலத்தில் கட்டைகளை இறுக்கியும் கூடாரம் அமைக்கப்பட்டிருக்கிறது. தரையிலுள்ள ஈரத்தைப்போலவே கூடாரத்திற்குள்ளும் தரை ஈரமாக இருக்கிறது.

இந்தம் கம்பி வேற சுடுகுதய்யா.. என்று கைகளில் இருந்த கம்பியை பக்கத்தில் இருந்த பாததிரத்தின்மேல் வைத்தார். மின்சாரம் கடத்துவதற்கு பயன்படுத்தும் ஒரு கம்பியைத்தான் வள்ளியம்மா அகப்பையாக பாவிக்கிறார். அந்தக் கம்பி எளிதில் வளைந்தும் விடும். கொதிக்கும் எண்ணையில் பட்டுக் கொண்டிருப்பதால் கடுமையாக சுடும். டேனிஷாவின் பொம்மை வீட்டுக்கும் அந்தக் கம்பி அகப்பைக்கும்கூட பெரிய வித்தியாசங்கள் இருப்பதுபோல எனக்கு தொயவில்லை. டெனிசா பொம்மை வீட்டில் சமைக்கும் பொழுது இதைப்போல தடிகளைத்தான் அகப்பையாக பாவிப்பாள். சட்டியாக சிரட்டைகளை பாவிப்பாள். குடியேறி சில நாட்களேயாகயிருக்க முற்றத்தில் இன்னும் புற்கள் சாகாமல் வெளித்தள்ளுகின்றன. மிகவும் அழகாக இருக்கிறது வள்ளியம்மாவின் மண் அடுப்பு. மழை பெய்த்தால் அந்த அடுப்பு கரைந்து விடும். இந்த மழைக்குள்ளயும் அடுப்ப ஒரு மாதிரி மூடிக்கீடி காப்பாத்திட்டன்… என்று சிரித்தபடி சொன்னார்.

பெருநிலத்தில் எல்லா வீடுகளிலும் அந்த மாதிரி மண் அடுப்புக்கள்தான் பெரியளவில் பயன்படுத்தப்படும். எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற பொன்னக்கா மிகவும் அழகான மண் அடுப்புக்களை செய்வார். எங்கள் கிராமத்தில் பொன்னக்காவை கூப்பிட்டுத்தான் எல்லோரும் அடுப்பு போடுவார்கள். முதல் நாள் புற்று மண் வெட்டி குலைத்து ஊற வைப்பார். பெரும்பாலும் மாலை நேரங்களில் பொன்னக்கா அடுப்பு போடுவதற்கு எதாவது ஒரு வீட்டுக்குப் போவார். வரும் திங்கள் சுப்புறு வீட்டுக்கு அடுப்பு போடனும்… செவ்வாய் முத்துவேல் வீட்டுக்கு போட்டுக் கொடுக்கனும்… என்று பெரிய பட்டியலே கையில் இருக்கும். பொன்னக்காவின் விட்டில் உள்ள அடுப்பு அழகாக மெழுக்கப்பட்டு திருநீறு பூசப்பட்டிருக்கும். இது யாரு பொன்னு போட்ட அடுப்பா? என்று பார்த்தவுடன் கேட்பார்கள்.

வள்ளியம்மாவின் அடுப்பு வெட்டை வெளியில் இரண்டு காட்டுத் தடிகள் வைக்கப்பட்டு எரிந்து கொண்டிருந்தது. சின்னத் தறப்பாள் துண்டை கூரையாக கொண்ட அடுப்புகள், தூக்கிக் கொண்டு போய் கூடாரத்தறி;குள் வைக்க கூடிய அடுப்புக்கள் மழையில் ஊறி உடைந்த அடுப்புக்கள் என்று பல வகையான அடுப்புக்களை காணுகிறேன். தடியை அடுப்புப் பக்கம் தள்ளிக் கொண்டு என்ட புள்ளய காணல்ல அய்யா என்று ஒற்றை கைகயை தலையில் வைத்தபடி பிதற்றத் தொடங்கினார். எங்க இருக்கிறானோ என்னமா நடந்தது ஒண்ணும் தெரியேல்ல… இரவிரா அதத்தான் யோசிச்சுக்கிட்டுக் கிடக்கிறன்… என்ன செய்யிறது? தின்கிறதுக்கு எதாவது செய்யனுமே? அதுதான் இந்த முறுக்கை சுட்டு கிளிநொச்சி ஆஸ்பத்திரியடியில வைச்சிக்கிட்டு இருப்பேன்… போற வார சின்னனுகள் வாங்கி சாப்பிடும். அப்புறம் சாயந்திரத்தில இப்படி காய் கறிய வாங்கிட்டு வந்து இங்க விக்கிறன் என்று சொல்லிக் கொண்டு வேகிய முறுக்குகளை பாத்திரத்தில் போட்டு குலுக்கினார்.

அந்த டெனிசாப் பிள்ளய காணல்ல… தான் கட்டின வீட்டுக்குள்ள விளையாடிக்கிட்டிருக்கும்… என்று அவளின் பொம்மை வீட்டைப் பார்த்தார். இன்னைக்கு என்ன சாப்பிட்டிச்சோ தெரியல்ல… இரண்டு முறுக்கு குடுக்கனும் பாவம். அந்தப் புள்ளயின்ட அப்பா செல் விழுந்து செத்திரிச்சு. அதிலதான் அவங்க தாத்தாவும் மாமாவும் செத்தாங்க… என்று சொல்லிவிட்டு டெனிஷாவை வள்ளியம்மா கூப்பிட்டார். டெனிஷா என்னும் குழந்தை நிகழ்காலத் துயரம் மிக்க குழந்தையாக வந்து கொண்டிருந்தாள். கேள்விகளை விதைக்கும் மனதை உலுக்கும் புன்னகையுடன் வந்தாள். எதிர்காலம் பற்றிய சூன்யமான வெளிகள் தெரிந்தன. அம்மா வேலை தேடி போயிருக்கிறா… நான் விiயாடிக் கொண்டிருந்தனான்… என்றாள் டெனிஷா.

ஓம் தம்பி அந்தப் புள்ள நிக்காம வேலைக்கு போயிட்டுது. என்ட மற்ற மகள்ட புருசனும் தடுப்பிலதானிருக்காரு… என்றபடி தங்கப்பிள்ளை வந்தார் டெனிஷாவின் அம்மம்மா. அவர்கள் கதைத்த விதத்தைப் பார்த்ததும் நீங்க மட்டக்கிளப்பா? என்று அவரைப் பாத்துக் கேட்டேன். நாங்க மட்டக்களப்பில திருக்கோயில். தொண்ணூறாம் ஆண்டே இங்க வந்திட்டம். கொஞ்ச நேரம் கதைத்தி பிறகு இராவுக்கு விளக்கும் இல்லத் தம்பி… இந்த பத்தக்குள்ள இந்தக் குட்டி குரும்பானுகள வைச்சுக் கொண்டு எப்படி படுக்கிறது? தங்கப்பிள்ளை அம்மாவை பரிவுடன் பார்த்தபடி… நம்ப எல்லாருமே இப்படியே கிடந்து கதைச்சிக்கிட்டு இருப்பம் என்றார் வள்ளியம்மா. டெனிசா கொஞ்சம் கொஞ்சமாக முறுக்கை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

பிரிவுகளும் வலிகளும் இந்த நிலத்தில் நிறைந்திருப்பதை நினைக்க மனம் என்னவோ செய்தது. தம்பி இந்த இடத்தையெல்லாம் எடுக்கப் போறாங்களாம் என்னு சொல்லுறாங்க. நாங்க எங்க போறது? அட… இந்த நிலத்துண்டுதான் எங்களுக்கு இருக்குதுன்னு இங்க வந்தா அதையும் பறிக்கிறாங்க. பொன்னகர் என்ற அந்தக் கிhராமத்தில் ஐம்பது குடும்பங்களுக்கு மேல் வசித்து வந்தார்கள். இப்பொழுது தடுப்பு முகாமிலிருந்து 15 குடும்பங்கள் வந்து விட்டன. ஏனைய குடும்பங்களை கிளிநொச்சி மத்திய கல்லூரியில் தடுத்து வைத்திருக்கிறார்கள். இந்த இடத்தில இனக்கலவரம், சண்டை என்டு பெரிய துன்பங்கள அனுபவிச்ச ஆக்கள்தான் வந்து குடியேறியிருக்காங்க. இதென்ன இழவு திரும்பத் திரும்ப துன்பமய்யா… ஏதோ கட்டப் போறாங்களாம். அதுக்கு நம்ம வயித்திலயா தம்பி அடிக்கிறது? இந்தப் புள்ளங்கள பாருங்க. இதுகளுக்கு ஒரு துண்டு நிலத்துக்கு நாங்க எங்க போறது? எங்கயாவது காட்டி இருங்கன்னா போக ஏலுமா? வள்ளியம்மாவின் கோபம் மிகுந்த வார்த்தைகளுக்கு தங்கப்பிள்ளை அம்மாவும் தலையாட்டியபடி ஒப்புதலளித்துக் கொண்டிருந்தார். என்ட ஒரு புள்ள தடுப்பில ஒன்டு கலியாணமும் இல்லாம கன்னியாக் கிடக்குது. ஓரு பிள்ளின்ட புருசன் செல்லில செத்துட்டாரு… என்றார் தங்கப்பிள்ளை அம்மா.

டேனிஷாவைத் தூக்கி வைத்துக் கொண்டார் தங்கப்பிள்ளை அம்மாவின் திருமணம் முடிக்காத மகள் இராசகுமாரி. டேனிஷாவின் முகத்தைப் பார்க்கும் பொழுது நிலமற்ற குழந்தையைப் போலிருந்தாள். மீண்டும் மீண்டும் டெனிஷாவைப் பார்த்தேன். நிகழக்காலத் துயரம் முகத்தில் வடிந்தபடியிருந்தது. இப்படித்தானே என்ன செய்யப் போகிறோம் எனத் தெரியாமல் சாந்தபுரம் பாடசாலையிலும் குழந்தைகள் காத்துக் கிடக்கின்றனர். சாந்தபுரம் மக்கள் சொல்லுவதைப்போலவே பொன்னகர் மக்களும் இந்துபுரம் மக்களும் நாங்க எங்கட காணிக்கு போக வேணும் என உறுதிபடச் சொல்கிறார்கள். ஆனால் ஏழு லட்சத்திற்கு வீடு கட்டித் தாரம் என்ற வார்த்தைகளால் இந்தக் கிராமம் குழம்பியிருக்கிறது. அப்ப காசு தந்த என்ன வேணுமன்டாலும் செய்யிறதே? எங்கட காணி அதவிடப் பெறுமதியானது என்டது சிலதுகளுக்கு விளங்கேள்ள என்றார் புவனா. போர் தீராத வறுமையை அளித்து எதிர் காலத்தை சூன்யமாக்கியிருப்பதால் சிலர் காணிகளை விட்டுக் குடுத்திட்டு காச வாங்குவம்… என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

வள்ளியம்மாவைப்போல மலையகத்தில் இருந்து வந்த ஆராயி அக்காவும் முறுக்கு போன்ற பலகாரங்களை சுட்டு விற்பார். கச்சான் அல்வா, முட்டை பிஸ்கட், லட்டு இப்படி செய்து அதில் வரும் வருமானத்தை வைத்துத்தான் வாழ்க்கைiயை நகர்த்திக் கொண்டிருந்தவர். இப்பொழுது ஒரு கூடாரத்திற்குள் சுற்றி உரைப்பைகளை கட்டிக் கொண்டு இருக்கிறார். இந்த முறுக்கு முதலிய பலகாரம் நெருக்கடி மிக்க வாழ்க்கையில் பெரும் கைகொடுப்பதை ஆராயி அக்காவை வைத்தே பார்த்திருக்கிறேன். முதலில் இப்படிச் சில பைக்கற்றுக்களுடன் தொடங்கி பின்னர் பெரிய கம்பனியாக்கி விடுவார். ஏன்னைப் போன்றவர்கள் அவரது முகவராகி கடைகளுக்கு பலகாரங்கள் விற்றிருக்கிறோம்.

பெருநிலத்தில் மீளக்குடியேறிய பல இடங்களுக்குச் சென்ற பொழுது இப்படி பொம்மை வீடுகள் கண்களுக்கு தெரிந்தன. பெரியவர்கள் இருக்கும் கூடாரங்களில் இருப்பதைவிட குழந்தைகள் அந்த கூடாரங்களில்தான் இருக்க விரும்புகிறார்கள். வீட்டில் உள்ள பழைய பொருட்களை எடுத்து வைத்து விளையாடும் பழக்கம் குழந்தைகளிடம் அதிகம் காணப்படுவதுண்டு. ஆனால் பெருநிலக்குழந்தைகளின் வீட்டில் பழைய பொருட்களை காணமுடியாது. எல்லாம் அடித்துச் செல்லப்பட்டதைப்போல கிடக்கிறது. பழைய பொருட்கள் உக்கி விட்டன. வீடே இல்லாத பொழுது அவர்கள் எதை எடுத்துக் கொள்வார்கள். அகதிக் குழந்தைகள் என்பதையும் பொம்மை வீடுகள் என்பதையும் அகதி வீடுகள் என்பதையும் கிழிந்து போன பழைய தறப்பால்கள் சொல்கின்றன.

காயம் பட்ட சுவர்கள், ஓட்டை விழுந்த கூரைகள் என்பவைகளைவிட எத்தனை வீடுகள் அழிந்து கிடக்கின்றன. வீடில்லாத பொழுதுதான் முதலில் அவலம் ஏற்படுகிறது. அகதியாகிறான். குhற்றுக்கும் வெயிலுக்கும் மழைக்கும் தஞ்சமடைய முடியாது தவிக்க நேரிடுகிறது. இரவு உறக்கம் எல்லாம் துயர் நேரங்களாகின்றன. ஒரு நாள் வீட்டுக்குச் செல்ல முடியாது தெருவில் தவித்த யாராலும் இதை புரிந்து கொள்ள முடியும். வாழ்ந்த வீடு அழிந்தது என்கிற செய்தியை அறியும் பொழுது ஒருவர் தான் அழிந்துபோனதை உணர்வார். பெருநிலத்தில் தளிர்களும் தடிகளும் கூரையாகிவிட்டன. கூரையற்ற வீடுகளே சில எஞ்சியிருக்கின்றன. வீடற்றவர்கள் பலர். கூடாரங்களின் நிலம் என்கிற அளவில் பலவீனமான கூடாரங்கள் நிறைந்து விட்டன. சில குழந்தைகள் பொம்மை வீடுகளை அமைக்க சிறிய துண்டு தறப்பாளுக்காக அழுகின்றன.

யாருமறிய இந்தக் குழந்தைகளின் கைகளில் இருக்கும் பொருட்கள் வெறும் பொம்மைத்தனமானவை என்று சொல்ல முடியாது. சில வேளை தடிகளையும் வெடித்த வெடி பொருட்களின் பாகங்களையும் எடுத்து வைத்து விளையாடுகிறார்கள். மண் தடுப்பரண்களையும் செய்து காட்டுகிறார்கள். வெற்று ரவைச் சன்னங்களை வரிசையாக அடுக்கி வைத்துக் கொண்டு இடையிடையே செல்களின் விசிறிகளையும் கோதையும் வைத்து விட்டிருக்கிறார்கள். இந்தக் குழந்தைகள் ஒரு வகையில் பொம்மைகளைப்போல ஏதுமறியாது தங்கள் பெற்றோர் ஆதரவாளர்களின் கைகளில் இருக்கின்றனர். அல்லது மடிகளில் இருக்கின்றனர்.

எப்பொழுதும் உடைந்து போகும் நிலையில் காற்றுக்கு அள்ளிச் செல்லும் நிலையில் மழை வெள்ளம் உட்புகும் நிலையில் இருக்கின்றன பொம்மை மக்களின் கூடாரங்கள். இந்த மக்களை பொம்மைகளைபோல தள்ளி தள்ளி வைப்பதும் பொம்மைகளை ஏமாற்றுவதுபோல ஏமாற்றுவதும்தான் இந்த நிலத்தில் இன்று நடக்கிறது. உறுதியான வீடுகளை காணவில்லை. வாழ்ந்த உறுதியான இடங்கள் வீழ்ந்து கிடக்கின்றன. சாம்பலும் மண் துகள்களும் கற்சிதைவுகளும் இரண்டாவதாக பொய்யப் போகும் மழையில் மேலும் கரைந்துவிடப் போகின்றன. உறுதியானதும் அழகானதுமான வீடு எப்படி இருக்கும் என்று டெனிஷாவோ நானோ அறிந்ததில்லை. மரப்பொந்துகளுக்குள் பற்றைகளுக்குள் சருகுகளுக்குள் போய் படுத்துக் கிடக்கும் பிராணியாக ஒடுங்கிக்கிடக்கின்றோம்.

என் புள்ளகள் நான் குந்தியிருக்கிற இடத்துக்காகத்தானே செத்துப் போனதுகள். அதுகள் செத்துக் கிடந்த இடத்தையும் அள்ளிக் கொண்டு போயிற்றாங்களே என்று கண்கள் கரைய சொல்லத் தொடங்கினார். என் இரண்டு புள்ளகள் அப்படிப் போச்சுது. ஓன்னு எங்க போனிச்சு என்ன நடந்தது என்னு தெரியாது? என்று வள்ளியம்மா கண்களை துடைத்துக் கொண்டார். இதுக்குள்ள கிடந்து சாக வேண்டியதாப் போச்சுது நம்பட நிலை… என்று மனம் வலிக்க சொல்லிக் கொண்டிருந்தார். டெனிசாவுக்கு நிலமில்லை. வீடில்லை. அந்தக் குழந்தை எங்கு போகும்? எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்று சொல்லுவார்கள். பொம்மைகளை தூக்கி எறிவதைப்போல இந்தச் சனங்களை தூக்கி எறிகிறார்கள். எங்கயாவது போய் வாழட்டும். ஆனால் டெனிஷாவுக்கு தெரியுமா அவள் எங்கு பிறந்தாள். இறுதியாக எந்த நிலத்தில் வாழ்ந்தாள்? அவள் விட்டுப் பெயர்ந்து சென்ற நிலம் எது? அந்தச் சிறிய வயதில் அவள் எல்லாhவற்றையும் அறிந்தபடி மௌனமாக இருக்கிறாள். இரசாகுமாரி என்கிற பெரியம்மாவின் இடுப்பில் இருக்கிற தருணங்களில்தான் அவள் முகம் துயருடன் பிரகாம் அதிகரித்து மலருகிறது.

டேனிஷாவின் பொம்மை வீட்டுக்குள் ஒற்றை கையையும் ஒற்றைக் காலையும் இழந்த பொம்மை படுத்துக் கிடந்தது. கண்கள் காயமுற்றிருந்தன். இந்தக் காயங்கள் எப்படி வந்தன? பொம்மையின் கை எங்கே? பொம்மையின் கால் எங்கே என்று டெனிஷாவைப் பார்த்துக் கேட்க முடியாதிருந்தன. அவளின் மனதில் ஆயிரம் ஆயிரம் கதைகள் தைக்கப்பட்டிருந்தன. பெருநிலமோ பொம்மைகளின் பொம்மை வீடுகள் நிறைந்த பொம்மை நிலமாகி விட்டது. நேற்றிரவு பெய்த கடும் மழையில் டெனிஷாவின் பொம்மை வீடு கவிழ்ந்து வெள்ளத்தில் அள்ளுண்டு சென்று விட்டது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...