Sunday, November 28, 2010

மாவுள் கண்கள்

பெருநிலத்தின் கதைகள் : 07 - நவராஜ் பார்த்தீபன்

எதிர்பாராமல் உதயகுமாரை வெண்புறா நிறுவனம் இருந்த இடத்தில் வைத்துப் பார்த்தேன். உதயகுமார் உயிருடன் இருக்கிறான் என்பது எனக்கு அப்பொழுதுதான் தெரியும். என்னைக் கண்டதும் இருவரும் ஒருவரை ஒருவர் விசாரிக்கத் தொடங்கினோம். எங்கடா இருக்கிற? எப்பிடியடா இருக்கிற? எங்க இருந்தனீ என்ற கேள்விகளை மாறி மாறிக் கேட்டோம். உதயகுமார் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு ஒரு சில நாட்களாகியிருந்தன. மிக மெலிந்து போயிருந்தான். என்னடா இப்பிடி இருக்கிற? என்று அவனைப் பார்த்துக் கேட்டேன். முகாமில சாப்பிட்ட சாப்பாட்டின்ட வெளிப்பாடு என்றான். என்னை அவனது வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனான். கிளிநொச்சியில் கரடிப்போக்கின் ஊடாக செல்லும் பொழுது ஒரு பாதை உருத்திரபுரத்திற்கும் இன்னொரு பாதை நாலாம் வாய்க்காலுக்கும் செல்லுகின்றது. உருத்திரபுரத்திலிருந்து நாலாம் வாய்க்கால், உருத்திரபுரம், பரந்தன் இப்படி அந்தப் பகுதி எல்லாமே வயல் நிலங்கள்தான். பச்சை வயல்களும் வாய்கால்களும் என்றிருந்த அந்தப் பகுதி இப்பொழுது கருகி வெளித்துப் போயிருந்தது.

பாத்திய எங்கட வயல்கள… என்று சோகம் பீறிட என் முகத்தை பார்த்து கேட்டான். படிக்கும் நேரம் தவிர மிகுதி நேரங்களை உதயகுமார் வயல்களில்தான் செலவிடுவான். இந்த வயல்கள் எந்தளவு தூரத்திற்கு செல்லுகின்றன என்று முன்பு அவனின் வீட்டுக்குச் செல்லும் பொழுது நான் கேட்டிருக்கிறேன். வயல்கள் பச்சையாய் விரிந்திருக்கும். இடையிடையே குடில்களைப்போல தெரியும் பூவரச மரங்கள் பச்சையாய் அசைந்து கொண்டிருக்கும். நாவல் மரங்கள் செழித்து பழங்கள் வாய்க்காலிற்குள்ளம் வயல்களிற்குள்ளும் கொட்டிக் கிடக்கும். கொக்குகளும் கானாங்கோழிகளும் ஓடித் திரிந்து கொண்டிருக்கும். வரம்புகளில் புற்கள் வளர்ந்து பச்சை மேடாயிருக்கும்.

இரணைமடுக்குளத்திலிருந்து வரும் நீர் கிளிநொச்சி குளத்திற்கு வந்து மீண்டும் பல இடங்களுக்கு பிரிந்து செல்கின்றன. உதயகுமாரின் வீட்டுக்குச் செல்லும் வழியிலும் ஒரு வாய்க்கால் செல்கின்றது. அது எங்கு செல்கின்றது என்றும் நான் உதயகுமாரிடம் கேட்டிருக்கிறேன. இடையிடே வீடுகள் ஒன்றிரண்டு இருக்கின்றன. மரத்தாலும் சீமென்டாலும் தடிகளாலும் பாலம் போட்டிருக்கும். சில இடங்களில் பாலம் இல்லாமல் வாய்க்காலைத் தாண்டியும் செல்வார்கள். சில இடங்களில் இறங்கி கால் நனையவும் செல்வார்கள். உதயகுமார் வீட்டுக்கு போகும் பொழுது அவனது அம்மா சமைத்துக் கொண்டிருந்தார். உதயகுமார் வீட்டில் பச்சை அருசியில்தான் சோறு சமைப்பார்கள். பச்சை அருசி சோறு அவனது வீட்டில் மட்டுமல்ல வன்னியில் உள்ள எல்லா வீடுகளிலும் சமைப்பார்கள். பச்சை அருசி சோற்றோடு சம்பலோ, பருப்புக் கறியோ சாப்பிட்டால்கூட போதுமாக இருக்கும். இப்பொழுது உதயகுமாரின் அம்மா நிவாரண அருசியை கழுவி உலையில் போட்டுக் கொண்டிருந்தார்.

வாங்க தம்பி… என்றது அவரது அன்பான அழைப்பு. உதயகுமாரின் அப்பா வேப்ப மரத்தின் கீழ் படுத்து நல்ல நித்திரை கொண்டிருந்தார். அந்த வேப்ப மரம் மிக வலுவுடன் நின்றிருந்தது. பல தலை முறைகளை கடந்து முறுக்கேறி வலியுடையுடன் அது நின்று கொண்டிருந்தது. உதயகுமாரின் அப்பா தினமும் வயல்களுக்குள் நின்று வேலை செய்து கொண்டிருப்பார். இப்பொழுது மிதிவெடிகள் கிடக்கலாம் என்பதால் அவர் வயல்களுக்குள் இறங்காமல் தூங்கிக் கொண்டிருக்கிறார். இன்னும் வயல் விதைக்க படையினர் அனுமதி வழங்கவில்லை என்று உதயகுமார் சொல்லிக் கொண்டிருந்தான்.

வெள்ளை அருசி சோற்றுடன் சாப்பாட்டை முடித்துக் கொண்டு நானும் உதயகுமாரும் பரந்தன் குமரபுரத்தில் உள்ள மணியக்காவின் வீட்டுக்கு போனோம். அதற்கு முன்பாக நான் மணியக்காவின் குமரபுர வீட்டுக்கு போனதில்லை. நாங்களும் அவர்களும் ஸ்கந்தபுரத்தில் இடம்பெயர்ந்திருந்த பொழுதே பழகியிருக்கிறோம். இடம்பெயர்ந்த இடங்களில் எந்த வேறுபாடும் இல்லாமல் ஆழமாக பழகும் சூழலிருக்கும். வன்னியில் ஏற்பட்ட போர்கள் பல மகக்ளளை பல இடங்களில் வைத்து பழக வைத்திருக்கிறது. பரந்தனில் குடியேறிய மக்கிடம் விசாரித்து விசாரித்து போய் கொண்டிருந்தோம். மணல் தெருக்களாக இருந்தன. யுத்தம் நடந்த தடயங்களாக மண் திட்டுக்களும் பதுங்குகுழிகளும் அரண்களும் இருந்தன. இரண்டு அணிகளுக்கிடையில் தடுப்புச் சுவராக இருந்த பாலம், தெரு முடக்குகளில் பாதுகாப்பாக ஒளிந்திருந்து சண்டை பிடித்த இடங்கள் என்று பெரு யுத்தகளம் ஒன்றின் காட்சியை விரித்துக் கொண்டிருந்தது அந்த மணற்தெரு.

குமரபுரத்தில் இருக்கிற கால் ஏக்கர் குடியிருப்பில்தான் மணியக்கா இருக்கிறார். கால் ஏக்கரில் மீள்குடியேறியிருக்கிற சனங்கள் கூடாரங்களை அமைத்துக் கொண்டிருந்தார்கள். மணியண்ணையும் பூவரசம் தடிகளை நட்டு கூடாரம் அமைத்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் சுகியக்கா நின்று கொண்டிருந்தார். தீபன் வாரான் பார் புள்ள… என்று சுகியக்காவிடம் மணியண்ணை சொன்னதும் எங்க? என்று திரும்பி நின்று கொண்டு தன் ஒற்றைக் கண்ணால் பார்த்தார். சுகியக்கா என்னை கண்டதும் தீபன்… என்ட தம்பியப் பாருங்க.. என்று அழுத் தொடங்கினார். மெல்ல காலை நிதானமாக வைத்துக் கொண்டு என்னை நெருங்கி வந்தார்.

மணியக்கா எங்கோ நிவாரணம் குடுப்பதால் எடுக்கப் போயிருப்பதாகச் சொல்லிக் கொண்டு மணியண்ணை காணியில் நின்ற புற்களை செருக்கிக் கொண்டிருந்தார். மிகவும் கட்டையான அவரை புற்கள் மூடியபடி நின்றன. ஒற்றைக் கண்ணால் திருப்பித் திருப்பி சுகியக்கா என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் முன்பு பார்த்த சுகியக்காவின் கண்ணை காணவில்லை. கண்கள் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்? என்பதை என்னால் ஒரு செக்கன் கண்ணை முடிக் கொள்கையில்தான் புரிகின்றது. ஒரு அடியெடுத்துகூட வைக்க முடியாதிருந்தது.

யுத்தத்தினால் கண்களை பலர் இழந்து விட்டார்கள். எனக்கு ஒரு மாவுல் கண் வேணும் என்ற சுபராஜின் வார்த்தைகள் எனக்கு அவனைக் காணும் பொழுதெல்லாம் கேட்டபடியிருக்கும். பல்கலைக்கழகத்தில் அவன் படிக்க வரும் பொழுதிருந்த கண்களில் ஒன்று இப்பொழுது இல்லை. யாரோ ஒரு மாவுல் கண் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். இன்னும் சில கண்களை வாங்கி வைத்திருந்தால் மாறி மாறி பாவிக்கலாம் எனறு சுபராஜ் கேட்டான். அந்தக் கண்ணால் பார்க்க முடியுமா என்று ஒரு குழந்தை கேட்டது. மாவுல் கண் அசையுமாடா என்று அவனிடம் முதலில் நான் கேட்டேன். அசையும் என்றும் கண்களை முடிக் கொள்ளலாம் என்றும் சுபராஜ் சொல்லிக் கொண்டிருந்தான்.

சிலபேருக்கு யுத்தத்தில் இரண்டு கண்களும் பார்வை இழந்து விட்டன. கிளிநொச்சி மகா வித்தியாயலத்தில் படித்துக் கொண்டிருந்த விஜயலாதன் யுத்த களத்தில் மிதிவெடியை எடுத்து விளையாடிய பொழுது வெடித்ததில் இரண்டுகளும் இல்லாமல் போய் விட்டன. அவனின் அப்பாவும் யுத்தத்தில் இறந்து விட்டார். மாடு மேய்க்கும் பொழுது அம்பலகாமத்திலிருந்து இராணுவம் எறிந்து கொண்டிருந்த எறிகணைகளினால் யாழ் பல்கலைக்கழகத்தில் படிக்கும் ராஜ்குமார் இரண்டு கண்பார்வைகளைனயும் இழந்து விட்டான். அதே எறிகணை அவனின் அம்மாவையும் அப்பாவையும் முதலில் தின்றுவிட்டன. எனக்கு இந்த உலகம் எப்பிடி இருக்குமெண்டு தெரியும்… பாத்த உலகத்தை பார்க்கம இருக்க கஷ்டம்தான்… என்று ராஜகுமார் சொல்லிக் கொண்டிருப்பான்.

சுபராஜிற்கு கண்கள் வாங்க வேண்டும் என்று ஒரு கடைக்கு போன பொழுது அவனது கண்கள் இருந்த குழிக்கு அளவான கண்கள் இல்லை என்று திரும்பி வந்தான். அவனுக்கு சிறிய கண்கள் தேவை என்றும் அதை கொழும்பில் இருந்துதான் எடுத்து வரவேண்டும் என்று கடைக்காரர் சொல்லியிருக்கிறார்கள். மாவுல் கண்கள் ஆட்டின் கண்களைப்போலவே இருக்கும். முன்பு யுத்தத்தினால் கண்களை இழந்தவர்கள் பலர் ஆட்டுக் கண்களைத்தான் பாவித்தார்கள். போராளிகள் பொது மக்கள் என்று பலரைப் பார்த்திருக்கிறேன். அந்தக் கண்களால் பார்க்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை.

கோணாவில் பாடசாலையில் படிக்கும் யோகப்பிரியாவிற்கு கண்ணில் எறிகணை பட்டததில் கருத்த முழி; இல்லாமல் போய் விட்டது. வெள்ளை முழி மட்டும் இருக்கிறது. அது சிறுத்து ஒட்டிக் கொண்டிருந்தது. அவள் கண்களை முடித் திறக்க முடிகிறது என்று ஆறுதல் பட்டாள். சில போராளிகள் கண்கள் இரண்டும் கைகள் இரண்டும் கால்கள் இரண்டும் காதுகள் இரண்டும் இல்லாமல் இருக்கிறார்கள். சிலருக்கு இந்த முக்கியமான உறுப்புகள் ஒன்றுமே இல்லாமல்கூட இருக்கிறது. இரண்டு கைகளும் இல்லாமல் கண்ணிலும் காயத்துடன் தன் எல்லா வேலைகளையும் ராஜா அண்ணன் பார்த்துக் கொள்ளுவார். சுப்பர் கப் மோட்டார் சைக்கிளில் நிறைய பொருட்களை கட்டிக் கொண்டு வேகமாக ஓடிச் செல்கையில் அவரை பார்த்து கையுள்ளவர்கள் எல்லாம் ஏங்கிக் கொண்டு நிற்பர்hகள். போராளி வெற்றிச்செல்விக்கு ஒரு கையும் ஒரு கண்ணும் இல்லை. அவர் என்னிடம் வரும் பொழுது சிலவேளை ஒரு பொய்க்கை கொண்டு வருவார். சிலவேளை அது கழன்று கீழே விழுந்து விடும். சுப்பர் கப் மோட்டார் சைக்கிளில் அந்தத்கையை ஒருமாதிரி ஊன்றிக் கொண்டு வருவார். சிலவேளை பொய்க்கையை கழட்டி முன்கூடைக்குள் வைத்திருப்பார்.

பார்த்துக் கொண்டிருந்த உலகத்தை பாக்கமால் இருப்பது எப்படி துயரமானது. இருள் எப்படியிருக்கும். வெளிச்சம் எப்படியிருக்கும். பொருட்கள் எப்படியிருக்கும். நீர் எப்படியிருக்கும் என்று… எல்லாம் எப்படியிருக்கும்? என்பதை பார்த்த இவர்களையும் பிறப்பிலே கண்பார்வை அற்றவர்களையும் யுத்தம் தனது கோரமான ஒலிகளால்; வதைத்திருக்கிறது. ராஜ்குமாருக்கு செல்கள் விழுவது விமானம் தாக்குவது என்பன எப்படியிருக்கும் என்று தெரியும். அவன் பிறந்த நாள் முதல் முல்லைத்தீவில் நடக்கும் சண்டைகள், எறிகணைத் தாக்குதலகளுக்கு முகம் கொடுத்திருக்கிறான். என்ன சத்தமாயிருக்குது… இப்ப என்ன நடந்தது? விமனமா? ஷெல்லா? என்று இவனைப் பார்த்து பிறப்பிலே கண்பார்வை இழந்த பிள்ளைகள் கேட்பார்கள். நாளடைவில் அவர்களும் விமானம் வருகுது… செல் விழுகுது… குண்டு போடப்போறான்... இது கிபிர்தான்… என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் ராஜ்குமாரின் கண்களை பறிக்க முதலில் இருந்த யுத்த தளவாடங்கள் பல இப்பொழுது இல்லை. நிறைய நவீன யுத்த தளவாடங்கள் வந்து விட்டன. இப்பொழுது சனங்களுக்கு ஏற்ப அவர்களின் செறிவுக்கும் தூரத்திற்கும் அவர்களை அழிக்கும் வித்திற்கும் அவர்களை அச்சத்திற்கு உள்ளாக்கும் வித்தித்திற்கும் ஏற்ப பல ஆயுதங்கள் வந்து விட்டன. இந்தப் பத்தாண்டுகளில் ஏற்பட்ட நவீன ஆயுதங்களை ராஜ்குமார் பார்க்கவில்லை. ஆனால் அவனும் வெடிக்கும் சத்தங்களை வைத்து இவை என்ன ஆயுதங்கள்? என்று ஒரளவு கண்டு பிடிப்பான்.

நான் உங்களுக்கு மாவுள் கண் வேண்டித் தாரன்… என்று சொல்லியதும் சுகியக்கா எனக்கு மாவுள் கண் வேண்டாம் என்று சொல்லி விட்டார். ஏனக்கா என்று அவரைப் பார்த்து கேட்டேன். என்ட கண்ணை ஆர் தம்பி திருப்பித் தருவினம். என்ட எல்லாக் கண்ணையும் இழந்திட்டனே… என்று தரையில் விழுந்து அழத் தொடங்கினார். தரையில் குந்திக் கொண்டு ஒற்றைக் கண்ணால் தரையை பார்த்து பேயறைந்த மாதிரி இருந்தார். மளமளவென உரப்பையை கிண்டி இரண்டு புகைப்படங்களை எடுத்துக் கொண்டு வந்தார். ஒரு படத்தில் கோபியும் சுதன் அண்ணனும் சுகியக்காவும் அவர்களின் கடைசிக் குழந்தையை தூக்கி வைத்தபடி நின்று கொண்டிருந்தார்கள். மற்றப் படத்தில் கோபியும் கடைசிக் குழந்தையும் இருந்தார்கள்.

மணியக்கா 1996இல் சத்ஜெய யுத்தத்தினால் இடம்பெயர்ந்து ஸ்கந்தபுரம் முருகன் கோயிலடியில் எங்களுடன் இருந்தார். மணியக்காவுடன் அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த லட்சுமியக்கா என்று குமரபுரத்தில் இருந்து வந்த நிறையப் பேர் இருந்தார்கள். எங்களுடன் மிக நெருக்கமாக மணியக்கா குடும்பம், லட்சுமியக்கா குடும்பம், கோபியன்றி, பாங்அன்றி, கொக்குவில் அன்றி என்று நிறையப்பேர் பழகினார்கள். மணியக்காவும் லட்சுமியக்காவும் பரந்தன் குமரபுரத்தில் இருந்து 1990 ஆகாயக் கடல்வெளிச் சமரினால் இடம்பெயர்ந்து வந்திருந்தார்கள். கோவியன்றியும் பாங்கன்றியும் யாழ்ப்பாணத்திலிருந்து சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையால் இடம்பெயர்ந்து வந்திருந்தார்கள். ஸ்கந்தபுரம் முருகன் கோயிலைச் சுற்றி எங்களப் போல அகதிகள்தான் நிறைந்திருந்தனர்.

அப்பொழுது நான், செந்து, சுரேஸ், சின்னத்தம்பி, பெரியதம்பி, சுகியக்கா, சோபா, சசி எல்லாம் சின்னப் பிள்ளைகள். விளையாடுறது அடிபடுறது என்று எங்கள் பொழுதுகள் ஸ்கந்தபுரம் முருகன் கோயிலடியில் கழிந்து கொண்டிருக்கும். அன்றைய அகதிக் குழந்தைகளாக நாங்கள் முருகன் கோயிலடியில் விளையாடிக் கொண்டிருந்தோம். சோபாவும் சசியும் குமரபுரத்திலிருந்து தங்கள் பொம்மைகளையும் கொண்டு வந்திருந்தார்கள். அத்தோடு கோயிலடியில் உள்ள தடி தண்டு போன்ற பொருட்களையும் வைத்து விளையாடிக் கொண்டிருப்போம்.

சோபாவும் சசியும் இத்தியடி அம்மன் கோயிலடியில் தற்காலிகமாக இயங்கிக் கொண்டிருந்த பரந்தன் பாடசாலைக்கு போய் படித்துக் கொண்டிருந்தார்கள். எட்டாம் வகுப்பு இறுதித் தவணை பரீட்சை அக்கராயனில் நடந்த பொழுதுதான் நான் பாடசாலை போனேன். அதுவும் போன போன பாட்டுக்கு வினாத்தள்களை கொடுத்தார்கள். இருந்து எழுதிக் கொடுத்தோம். பெறுபேறும் பார்க்கவில்லை. மணியங்குளம் போன்ற இடங்களில் எங்களை கொண்டு போய் குடியேற்றினார்கள். அப்ப கிளிநொச்சிக்கு இனி போக ஏலாது போல கிடக்குது… என்ற நினைப்பு எனக்கு ஏற்பட்டது. மணியங்குளத்திலயும் நாங்கள் லட்சுமியக்கா மணியக்கா வீட்டுக்கு பக்கத்திலதான் காடு வெட்டி குடியிருந்தோம்.

யாழ்ப்பாணத்தில இருந்து வந்த குணம் அண்ணன், கிஷ்ணா அண்ணன் என்று எங்களைச் சுற்றி எல்லா அகதிகளும் வந்து மணியங்ளத்தில் காடு வெட்டிய இடத்தில் குடியேறினார்கள். குணம் அண்ணை கச்சான் இனிப்பு பைகளை செய்து தன்து பிழைப்பை ஓட்ட, கிஷ்ணா அண்ணன் அவற்றை கொண்டு கடையில போடுவார். தேவா அண்ணா கடலை வண்டில் வைத்திருந்தார். இந்தக் குடியிருப்பிலதான் சுகியக்காவுக்கு திருமணம் நடந்தது. துளசி என்னும் திருகோணமலையைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் சுகியக்காவை திருமணம் செய்து கொண்டார். கோபி என்ற பெண்குழந்தை அவர்களுக்கு பிறந்தது. குழந்தையும் மனைவியும் வீட்டிலிருந்தாலும் களம் அவர்களை அழைத்துக் கொண்டிருந்தது. துளசியண்ணன் ஒரு நாள் களத்திற்கு சென்றார். அன்று நடந்த சண்டையில் பலர் இறந்து விட்டார்களாம் என்ற செய்தி ஊரில் சகிந்தது. பின்னர் எதிர்பாராத சமரில் துளசி அண்ணன் வீரமரணம் அடைந்து விட்டார் என்ற தகவல் சுகியக்காவுக்கு கிடைத்தது. எதையும் அறியாமல் பிறந்து முப்பது நாட்களேயான குழந்தையான கோபிகா சிரித்துக் கொண்டிருந்தாள்.

துளசியண்ணையின் கல்லறைதான் இருபது வயதான சுகியக்காவின் உலகமாகி விட்டது. மக இளம் வயதில் சுகியக்காவைப்போல பல பெண்கள் விதவையானார்கள். அவர்கள் மறுமணம் செய்ய வேண்டும். மறு வாழ்வுக்கு செல்ல வேண்டும் என்பதைத்தான் ஊரில் உள்ள சனங்களும் போராளிகளும் வற்புறுத்துவார்கள். 2000களான அந்தக் காலத்தில் பல அப்பாக்கள் களம் சென்று வீரமரணம் அடைந்தார்கள். எல்லைப்படைகளாகவும் துணைப்படைகளாகவும் களத்திற்கு செல்லுவார்கள். சுகியக்காவை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று போராளிகள் பலர் வீட்டில் வந்து புத்தி சொல்லிக் கொண்டிருப்பார்கள். சுதன் என்ற துளசி அண்ணனின் நண்பன் சுகியகக்காவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். ஒரு மாதிரி சுகியக்கா மறுமணம் செய்து கொண்டார். கோபிகாவை மிக அன்போடு பார்த்துக் கொண்டார் சுதன் அண்ணன்.

மீண்டும் ஒரு பெண்குழந்தை அவர்களுக்கு பிறந்தது. அந்தக் குழந்தை கைக்குழந்தையாக இருக்கும் பொழுதுதான் வன்னி இறுதி யுத்தத்தில் சுகியக்கா இடம்பெயரத் தொடங்கினார். கோபிகாவை சுதன் அண்ணன் தூக்கிக் கொண்டு ஓட சுகியக்கா பிறந்த குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தார். பக்கத்தில் மணியக்கா, மணியண்ணை, செந்து, சுரேஸ் எல்லோரும் சனங்களோடு ஓடிக் கொண்டிருந்தார்கள். பொக்கனையில் எல்லோரும் போய் தஞ்சமடைந்தார்கள். அங்கும் கடுமையான எறிகணகள் வந்து விழுந்து கொண்டிருக்கின்றன. செத்து விழுபவர்களை பார்த்துக் கொண்டு மிக அஞ்சியபடி சுகியக்கா தன் பிறந்த குழந்தையை பொத்தி வைத்துக் கொண்டிருந்தார்.

முதலில் ஒரு எறிகணை சுதன் அண்ணாவை அந்த இடத்திலேயே கொன்று விட்டது. அடுத்த எறிகணை விழும் பொழுது சுகியக்கா கோபியைக் கூட்டிக் கொண்டு குழந்தையை தூக்கியபடி ஓட தொடங்கினார். சுகியக்காவின் கையை பிடித்தபடி கோபி நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது கையை விட்டு நழுவி நிலத்தில் குப்புர விழுந்தாள். இரத்தத்தில் தோய்ந்தபடி கிடந்த கோபியை பார்த்து அழுது துடிக்கும் பொழுது கையில் இருந்த குழந்தையும் காயப்பட்டு மூச்சடங்கி போய்விட்டது. அடுத்த எறிகணை சுகியக்காவின் ஒற்றை கண்ணை தின்று விட்டது. கப்பலை நோக்கி ஓடிய சுகியக்கா இறந்த குழந்தையை கப்பல் வரை கொண்டு சென்றார். சுரேஸை காணவில்லை. லாம்மாஸ்டர் கொண்டு பொருட்களை ஏற்றச் சென்றவன். இறந்து கிடப்பதாக யாரோ சொல்லியும் என்ட புள்ள வருவான் என்று மணியக்கா அழுது துடித்தார். காணாத சுரேஸையும் கண்ணுக்கு முன்னால் எல்லா கண்களையும் இழந்து கிடக்கிற சுகியக்காவையும் நினைத்து மணியக்கா மணலில் கிடந்து துடித்தார்.

சுகியக்காவிடமிருந்த இறந்த குழந்தையை கப்பலடியில் மணற்தரையில் புதைத்து விட்டு கப்பலால் மணியக்காவும் கடுமையான காயமடைந்த சுகியக்காவும் ஏற்றி அனுப்பப்பட்டார்கள். இந்தக் கண் மடல் திறந்து மூடாது... மாவுள் கண் போட்டாலும் அது திறந்து கொண்டிருக்கும்… எனக்கு ஏனய்யா இனி கண்ணை… என்று சுகியக்கா திரும்பவும் சொல்லிக் கொண்டிருந்தார்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...