Friday, January 14, 2011

அம்மா இல்லாத வீடு

பெருநிலத்தின் கதைகள் : 10 அம்மா இல்லாத வீடு- குளோபல் தமிழ் செய்திகளுக்காக நவராஜ் பார்த்தீபன்


சுரேன் முற்றத்தில் இருந்து சட்டி பானைகளை கழுவிக் கொண்டிருந்;தான். அந்த சட்டி பானைகள் அழகை இழந்து போயிருந்தன. கறுத்து ஊத்தை பிடித்திருந்தது. தம்பி அந்தத் தாச்சிய எடுக்குக் கொண்டு வாடா கழுவுறதுக்கு... என்று தன் தம்பியை அழைத்துக் கொண்டிருந்தான் சுரேன். இதே முற்றத்தில் வசந்தாக்கா இருந்து கொண்டு சட்டி பானைகைள அழகாக கழுவும் காட்சிகள் என் கண்ணுக்கு முன்னால் வந்து கொண்டிருந்தன. கிழிந்த பாதிச் சரத்தைக் கட்டிக் கொண்டு குனித்திருந்தபடி கழுவிக் கொண்டிருந்தான். அவனின் தம்பி விதுசாந்தன் கூரையில்லாத வீட்டுக்குள் இருந்தான்.

வசந்தாக்காவின் சொந்த இடம் பழைய முறிகண்டி. றோசா அண்ணன் அவரை திருமணம் முடிந்த காலத்தில் சிறுவனாக இருந்த என்னை தன் சைக்கிளில் ஏற்றி பழைய முறிண்டிக்கு கூட்டிக் கொண்டு செல்லுவார். நீங்க கலியாணம் பண்ணினதுக்கு நான் இந்த காடெல்லாம் அலைய வேண்டிக் கிடக்குது... என்று றோசா அண்ணனை நான் நக்கலாக சொல்லுவேன். என்னைக் கூட்டிக் கொண்டு போகும் பொழுது முறிகண்;டி பிள்ளையார் கோயிலில் இறங்கி கும்பிட்டிட்டு எனக்கு கச்சான் கடலை எல்லாம் வாங்கித் தருவார். கிளிநொச்சியில் இருந்து பழைய முறிகண்டி போய் சேருவது எனக்கு ஏதோ பெரிய பயணத்தைப் போல இருக்கும். காலையில் புறப்பட்டால் மதியம் போய் சேர்ந்து விடலாம். முறிகண்டியில் இறங்கி காலைக் கழுவிட்டு அந்த மடத்தடியில் போய் இருப்பன். வுhவன்டா கும்பிட.. என்று றோசா அண்ணன் அழைப்பார். சீ நான் கும்பிடேல்ல.. என்று விட்டு இருப்பேன்.

அந்த மடத்திற்கு மேல் நல்ல குளிர்மையான மரங்கள் நிறைய நிற்கின்றன. புளியமரம் ஆலமரம் எல்லாம் இருக்கிறது. அந்த மடத்தில் உள்ள கட்டுக்களில் படுத்து உறங்கினால் மிகவும் நன்றாக இருக்கும். எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள பூசகர்தான் முறிகண்டிப் பிள்ளையார் கோயிலில் பூசை செய்து வந்தார். அவருடன் எப்படியும் சனி ஞாயிற்றுக் கிழமைகளில் அந்தக் கோயிலுக்கு செல்லுவேன். 1993களில்தான் இந்த சம்பவங்கள் நடந்தன. யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் வவுனியாவுக்கும் போற ஆட்கள் பலர் அந்த மடங்களில் படுத்துக் கிடப்பார்கள். ஆதரவற்றவர்களும் அந்த மடத்தில் வந்து படுத்துக் கிடப்பார்கள்.

சில வீடுகளில் முதியவர்கள் நான் பேசாமல் போய் முறிகண்டிப் பிள்ளையரின்ட மடத்தில படுத்திருவன் என்று வெறுட்டுவார்கள். பெரியம்மா எதற்கெடுத்தாலும் முறிகண்டியானே... என்று சொல்லுவார். அடிக்கடி நேத்தி வைத்து விட்டு போய் தேங்காய் உடைப்பார். இது மட்டும் நடந்தால் நான் முறிகண்யானிட்ட நடந்து போய்; தேங்கா உடைப்பன்... என்று சொல்லுவார். முறிகண்டிப் பிள்ளையார் கோயின் முன்னால் உள்ள தேங்காய் உமைடக்கும் தொட்டிலில் தேங்காய் சிதறல்கள் எப்பொழுதும் நிறைந்து கொண்டிருககும். அந்த தேங்காய் சிதறல்களை வெட்டி கொப்பராவாக காய வைத்து பிறகு எண்ணையாக்கி விக்கிறது என்று பெரிய நிருவாகம் முறிகண்டிக் கோயிலிலல் இயங்கியது. முறிகண்டிப் பகுதியில் வசிக்கிற ஆட்கள் பலர் அங்கு வேலை செய்வார்கள்.

போய் இறங்கியதும் கச்சான் கச்சான்... என்று கூவும் சத்தம் கேட்கும். வாங்கோ வாங்கோ கால் கழுவலாம்... கற்பூரம் வாங்கலாம்... கச்சான் வாங்கலாம்... தேத்தண்ணி குடிக்கலாம்... வாங்கோ வாங்கோ என்று போட்டி போட்டு கூவுவார்கள். பேரூந்தை விட்டு இறங்கும் பயணிகள் எந்தக் கடைக்கு செல்லுவது என்று தடுமாறுவார்கள். முறிகண்டிக் கச்சான் மிகவும் தனித்துவமான சுவையானது. முறிகண்டிக்குப் போனால் கச்சான் வாங்குவது ஒரு பழக்கம். முறிகண்டியை கடக்கும் பிரயாணிகளின் கையில் நிச்சயம் கச்சான் இருக்கும். கச்சானை சப்பிக் கொண்டே இருப்பார்கள். கச்சான் வியாபாரத்தை பல குடும்பங்கள் வெற்றிகரமாகச் செய்து தங்கள் வாழ்க்கையை நகர்த்துவாரகள்.

கோயிலை சுற்றி நிறைய அலரி மரங்கள்தான் நிற்கின்றன. அந்தக் கோயிலில் நடக்கிற பூசைகளுக்கு இந்தப் பூக்களை அந்தப் பூசகர் பயன்படுத்துவார். பாத்தியாடா எங்கட கோயில?... எங்கட ஊர் பழம்பெரும் ஊர். உங்கள மாதிரி காடு வெட்டிக் குடியேறினனான்களே? என்று வசந்தாக்கா சொல்லுவார். ம்.. பெரிய ஊர்தான்.. போற ஆக்கள் எல்லாம் இறங்கி கும்பிட்டு தேங்காய் உடைச்சு கப்பூரம் கொழுத்தித்தானே போறினம் என்று நான் சொல்லுவன். முன்பு வேறு இடத்தில் கோயில் இருந்ததாம். பின்னர் அந்த பிள்ளையாரை தூக்கி வந்து தற்பொழுது இருக்கிற இடத்தில் வைத்தார்கள். இருநூறு வருடங்கள் பழமையானது என்பதற்கு சான்றுகள் இருக்கிறதாம் என்று வசந்தாக்கா சொல்லிக் கொண்டிருந்தார். தெருவில் பாலை மரத்தடியில் இருந்த ஒரு கல்லு இன்று முக்கியமான கோயிலாக வளர்ந்து விட்டது என்றும் வசந்தாக்கா சொல்லிக் கொண்டிருந்தார்.


இப்பொழுதோ முறிகண்டி நிறைய மாறியிருக்கிறது. அந்த மடங்கள் எல்லாம் யுத்ததில் உடைந்து விட்டன. கோயில் சூழல் மாறி குளிர்ச்சியைக் காணவில்லை. முறிகண்டியில் கடும் சண்டை நடந்தது. அக்கராயனை கைப்பற்றிய இராணுவம் அப்படியே அக்கராயன் குளம், நாலாம் கட்டை என்று கைப்பற்றிக் கொண்டு முறிகண்டிப் பக்கம் வந்தது. முறிகண்டியை பிடித்தால் அப்படியே அறிவியல் நகர் ஊடாக கிளிநொச்சியையும் வசந்தநகர், இந்துபுரம், சாந்தபுரம் என்று இரணைமடுவையும் கைப்பற்ற இராணுவம் முயன்றது. முறிகண்டியுடன் கிளிநொச்சியை தக்க வைக்க போராளிகள் கடுமையாக போராடியும் மண்தடைகளை உடைத்தபடி இராணுவம் முறிகண்டியை கைப்பற்றியது.

முதல் முதலில் முறிகண்டிப் கோயிலுக்குப் போகும் கோயிலின் கூரை உடைந்திருந்தது. ஆலயச் சூழல் சிதைந்திருந்தது. முறிகண்டி எப்படி யுத்த களமாக இருந்தது என்பதை முறிகண்டியிலிருந்து அக்கராயனுக்கு செல்லும் வழியில் உள்ள பதுங்குகுழிகளும் மண் அணைகளும் சொல்கின்றன. நீ பேசாமல் இருடா நான் தானே சைக்கிள உலக்குறன்... என்று றோசா அண்ணன் சொல்லுவார். கொக்காவில் உயர்வான பகுதி. கொக்காவில் ஒரு இராணுவ முகாம் இருந்தது என்றும் அதை இயக்கம் அடித்துப் பிடித்துக் கொண்டது என்றும் றோசா அண்ணன் சொல்லுவார். பெரிய அசைக்க முடியாத முகாம் இருந்ததாம். அதையும் மாங்குளத்தையும் இயக்கம் அடித்தது அப்பொழுது பெரிய வெற்றியாம் என்று கதைகளைச் சொல்லிக் கொண்டு வந்தார்.

அடேய் கரடி நிக்குமடா... என்று றோசா அண்ணன் சொல்லுவார். கரடியா? ம் சிலவேளை எங்கட சைக்கிளில பின்னால வந்து ஏறி இருக்கும் என்று என்னை வெறுட்டுவார். எனக்கு அந்த வழியில் காட்டுக் கோழிகள் திரிவதை பார்க்க நிறைய ஆசையாய் இருக்கும். எத்தனையோ நாள் பார்த்திருக்கிறன். டேய் அங்க பார் காட்டுக்கோழி... பாரடா... என்று எனக்கு காட்டுவார். நல்ல வடிவா இருக்குது... பிடிச்சுக் கொண்டு போய் வளப்பமா? என்று மிகவும் ஆசையுடன் கேட்டபன். அதைப் பிடிக்க ஏலாது... அதுகள் ஓடுற ஓட்டம்... இதுகள் வீட்டில இருந்தா காட்டுக்கு வந்தது என்று றோசா அண்ணனை கேட்டபன். ம்... சுட்டுத்தான்டா பிடிக்க வேணும்... பாதை மாறி வந்திட்டுதுகள். காட்டில இருந்து வளருரதால இப்படி வடிவா இருக்குதுகள் என்று சொல்லுவார். புத்துவெட்டுவான் கிராமமும் இடையில் வரும். எல்லாம் காடுதானே.. அடே இந்தக் கிராமத்தில நிறைய தொல்பொருட்கள் இருக்காம் என்று றோசா அண்ணன் சொல்லுவார். புத்துவெட்டுவானில் தமிழர்களின் புராதனங்கள் நிறைய புத்துள்ளன.

பழைய முறிகண்டிக் குளத்திற்குக் கிழ் பக்கமாக உள்ள பாதையால போக வசந்தாக்கா வீடு வந்தது. குளத்தின் குளிர்மையும் மரங்களின் நிழல் குளிர்மையும் என்று அந்தச் சூழல் இதமாயிருக்கும். அப்பாடா என்று ஒரு மாதிரி வந்து சேந்தாச்சு... என்ன ஊரப்பா இது? என்று சொல்லியதும் ம்.. நக்கலப்பார்... சரி முகத்தையும் கால்கைகளையும் கழுவிட்டு வா சாப்பிட என்றார் வசந்தாக்கா. ஏன் இவ்வளவு காடுகளத்தாண்டி வந்து இருக்கிறியள்? என்றேன். இந்த ஊரின்ட இந்தக் குளத்தின் அருமை உனக்குத் தெரியுமே? என்றார் வசந்தாக்கா. நாங்கள் பிறந்தது வளர்ந்தது எல்லாம் இங்கதான்டா... என்று பெருமையாக சொல்லுவார். அவர்களின் வீட்டில் சமைக்கிற சோறு, கறி எல்லாம் வித்தியாசமாக இருக்கும். நல்ல சுவையாக இருக்கும். அடேய் ஒல்லித்தடி கொஞ்ச நாள் இஞ்ச நின்டு சாப்பிடு நல்லா மொத்தமாய் வருவாய்... என்று சொல்லுவா. பின்னேரங்களில் வசந்தாக்காவின் தம்பி என்னை பழைய முறிகண்டி குளத்திற்கும் கூட்டிக் கொண்டு போவான். அந்தக் குளத்தில நிறைய தாமரைக்காய்கள் பிடுங்கி சாப்பிட்டுக் கொண்டு வருவேன். எங்கு பார்த்தாலும் ஒரே வயல்களாக இருக்கும். சரி... இனி என்ன... கிளிநொச்சிக்கு வாங்க.. அடேய் எங்கட ஊர் எங்களுக்கு உயிரடா... என்று வசந்தாக்கா சொல்லுவார்.

திருமணம் ஆகிய கொஞ்ச நாட்களில வசந்தாக்க கிளிநொச்சிக்கு வந்திட்டா. வசந்தாக்காவின் புன்னகைதான் அவரின் முக்கியமான அடையாளம். பெரியம்மாவுக்கு வசந்தாக்கா என்றால் சரியான விருப்பம். என்ட மருமகள் மருமகள்... என்று சொல்லுவார். றோசா அண்ண வசந்தாக்கா குடும்பத்தில பிறகு வசந்தாக்கா தான் எல்லாவற்றையும் கவனிக்கத் தொடங்கினார். சுமக்கத் தொடங்கினார். தன் மூன்று பிள்;ளைகளையும் கைக்கிளில் ஏற்றிக் கொண்டு பள்ளிக்கூடம் கொண்டு போவார். றோசா அண்ணன் மோட்டார் சைக்களில் முதல் லொறி என்று எல்லா வாகனங்களும் திருத்துற வேலை செய்கிறவர். அவர் உழைப்பதில் முழுவதையும் செலவழித்து விடுவார். வசந்தாக்காதான் வீடு கட்ட வேணும், கிணறு கட்ட வேணும். பிள்ளையளுக்கு படிப்புக்கு வேணும் என்று அவரை வழி நடத்துவார்;.

டேய் போய் படியடா.... விளையாடினது காணும் படியுங்க அப்பன்... என்று பிள்ளைகளிடம் எப்பொழுதும் அவர் சொல்லிக் கொண்டிருப்பது எனக்கு கேட்கும். பிள்யைள் படிச்சு நல்லா வரவேணும். படிக்க வேணும் என்பது வசந்தாக்காவின் இலட்சியம். எங்கட காலத்தில இப்படி படிக்கிற சந்தர்பம் கிடைச்சாத படிச்சிருப்பம்... நாங்கள் எருமமாடு மேய்ச்சு வயலில கிளி களைச்சு வளந்தனான்கள் என்று சொல்லுவா. வசந்தாக்காவின் எண்ணம் போல் பிள்ளைகளும் நன்றாக படித்தார்கள். சத்ஜெய யுத்தத்தில் அவர்களின் வீடு உடைந்து விட்டது. ஓயாத அலைகள் தாக்குதல் மூலம் போராளிகள் கிளிநொச்சியைக் பகைபற்றிய பிறகு வீட்டைத் திரும்ப கட்டியதுடன் கிணறும் கட்டிக் கொண்டார். அந்த நாட்களில் சீமெந்து கடும் தட்டுப்பாடு. விடுதலைப் புலிகள் சீமெந்தில் பதுங்குகுழி அமைத்திருவார்கள் என்பதால் இராணுவம் சீமெந்தை தடை செய்தது. எப்படியோ கிளிநொச்சிக்கு வரும் சீமெந்தை அதிக விலை கொடுத்து வாங்கி வீடும் கிணறும் கட்டி விட்டார் வசந்தாக்கா.

வசந்தாக்காவின் இறுதி மகன் விதுசாந் வசந்தாக்காவின் நினைவுப் டபத்தை எனக்கு நீட்டினான். அவளின்ட சிரிப்பை பாரடா என்று அம்மா சொன்னார். ம்... என்றபடி பாத்துக் கொண்டிருந்தார். அடிக்கடி உந்தப் படத்தை எடுத்து பாத்தக் கொண்டிருப்பான். இவனுக்கு தாய நினைச்சால் பெரிய கவலை... இப்படி ஆறேழு வயதில தாய் இல்லாம இவன் கஷ்டப்படுறன். இவன மாதிரி எத்தின பிள்ளையள் தாய இழந்து கஷ்டப்படுதுகள். எல்லாம் பாவமடா... என்று சொல்லிக் கொண்டு குறைச்சுட்டை நெருப்புக் கொல்லியை வைத்து பத்திக் கொண்டிருநார் சிவஞானம்தாத்தா. சிவஞானம் தாத்தா நீர்பாசனத்தில வேலை செய்தவர். இப்பொழுது ஓய்வு பெற்றிருக்கிறார். அவருக்கு எண்பத்தி எட்டு வயது. வாழ வேண்டிய அவள் போயிற்றாள் சாகவேண்டிய நான் இருக்கிறன். சிவஞானம் தாத்தாவின் கதையை கேட்க எனக்கு தொண்ணுற்றி ஒன்பது வயதில யுத்தத்தில இருந்து மீண்டு வநத அருளம்மாதான் நினைவுக்கு வந்தார். இவர் சொல்லுற மாதரிரி வாழவேண்டிய எத்தனையோ பேர் அநியயமாக கொல்லப்பட்டு விட்hடர்கள்.

இப்ப ஆர் இதுகள படிக்கச் சொல்லுறது? இதுகளும் படிக்கிற மனநிலையில இல்லை. அவனும் குடிச்சுக் கொண்டு திரியிறன். எந்த நேரமும் அவளைப் பற்றியே கதைச்சு அழுகிறான். எனக்கு இந்தப் பிள்ளையள தேற்றுரதா? றோசாவைத தேற்றுரதா? என்டு தெரியேல்லயடா என்றார் சிவஞானம்தாத்தா. ம்... எல்லாம் கனவு மாதிரி நடந்து முடிஞ்சுது. வசந்தாக்கா கட்டிய கிணறு அப்படியே இருக்கிறது. கிணற்றைப் பார்க்க அவரின் ஞாபகம் தவிர்க்க முடியாமல் வந்து கொண்டிருக்கிறது. வீடு கூரையற்றிருக்கிறது. சுவர்கள் உடைந்து விட்டன. அவள் கட்டின வீட்டின்ட கோலத்தைப் பார் என்றார் சிவஞானம்தாத்தா. அழயாயிருந்த வீடு பாழடைந்து இடிந்த கோலத்துடன் இருந்தது.

சுரேன் பானையில தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்தான். சில சுள்ளி விறகுகள வைத்து அடுப்பை பற்ற வைத்தான். இதுகள் நல்லா சாப்பாடு சாப்பிட்டு எத்தின நாளாகுது. சும்மா அவிச்சு அவிச்சு சாப்பிடுதுகள். சிலவேளை உப்பு புளி எதுவும் இருக்காது. பக்கத்து வீட்டு புள்ள சில நேரத்தில வந்து கறிய வைச்சு தரும். அவள் இருந்தால் இந்தப் புள்ளயலின்ட சாப்பாட கேக்கவா? வேணும்? வெள்ளி செவ்வா பாக்காமல் மீன்காச்சி தருவாள் எனக்கும் மச்சம் இல்லாமல இறங்காது... மதியம் ஆகிவிட்டால் சோற்றைக் சமைத்து வைத்து விட்டு சந்தைக்கு மீன் வாங்க சைக்கிளில் பறந்து பறந்து போறவார்.

காறிய காய்சிச வைத்து விட்டு பள்ளிக்கூடம் விட பிள்ளைகளை ஏற்றப் போவார். வந்து சாப்பாடு கொடுத்திட்டு மாலைநேர பிரத்தியேக வகுப்புக்களுக்கு ஏற்றிக் கொண்டு போவார். இப்படி நாள் முழுக்க பிள்ளைகளுக்காக இயங்கிக் கொண்டிருப்பார். வசந்தாக்காவின் கடைசி மகன் விதுசாந்தின் முகம் அம்மாவுக்காக ஏங்;கிக் கொண்டிருக்கிறது. அவனின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி இப்பொழுது இல்லை. மிகவும் சோர்வடைந்திருந்தான். அம்மா இல்லாத வீடு அம்மா இல்லாத பிள்ளை என்ற துயர்க்கதை அவனின் முகத்தில் எழுதப்பட்டிருந்தது.

வன்னி யுத்தத்தின் பொழுது ஒருநாள் விசுவமடுவில் இடம்பெய்ர்ந்து ஒரு இடத்தில் தஞ்சமடைந்திருந்தார்கள். இன்றைக்கு என்ட பிள்ளையளுக்கு கூல் காய்சிகச் கொடுக்கப் போறன்... என்று சொல்லிக் கொண்டு கூல் காய்சும் வேலையில் ஆயத்தமாகிக் கொண்டிருந்தார் வசந்தாக்கா. கடுமையாக எறிகணைகனள் வந்து விழுந்து கொண்டிருந்தன. கிடைத்த பொருட்களை வைத்து கூல் காய்ச்சும் வேலையில் அவர் கண்ணாயிருந்தார். வசந்தாக்காவின் பிள்ளைகள் மூன்றும் பதுங்குகுழியிற்குள் கூல் குடிக்க காத்துக் கொண்டிருந்தார்கள். மிகவும் சாதாரணமாக வந்த எறிகணை ஒன்று வெளியில் கூல் காய்சிக் கொண்டிருந்த வசந்தாக்காவையும் கூல் பானையையும் கொன்று போட்டிருந்தது. எல்லோரையும்போல இரத்த வெள்ளத்தில் வசந்தாக்கா சிதறிப்போய்க் கிடந்தார்.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக நவராஜ் பார்த்தீபன்

1 comment:

  1. மிகவும் உருக்கமான பதிவு. மனம் கசிந்து போகிறது. உங்கள் பதிவினை என்னுடைய வலைத்தளம் http://www.kpenneswaran.com இணைப்பு கொடுத்து இருக்கிறேன்.

    யதார்த்தா கி.பென்னேஸ்வரன்
    16 சனவரி 2010

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...